Monday, April 14, 2008

லக்கி லுக்கிற்கு அடித்த அதிர்ஷ்டம்



தமிழ் மணம் மூலமாக பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு பதிவில் கண்ணில் பட்ட படங்கள் . தனித்தனியாக போட முடியாததால் ஒரே படமாக தந்துள்ளேன்.

அனைவருக்கும் ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள்.

Sunday, April 13, 2008

சித்திரைத் திருநாள் / சர்வதாரி புத்தாண்டு வாழ்த்துக்கள்

இன்று சர்வதாரி ஆண்டின் முதல் நாள் மற்றும் சித்திரைத் திரு நாள்


சித்திரைத் திருநாளைப் பற்றி மதிமுக தலைவர் வைகோ பின் வரும் கருத்தை கூறியுள்ளார்.

""மழையும், குளிரும், பனியும் மறைந்து மஞ்சள் வெயில் கண்டு உயிரினங்கள் கொஞ்சிக் குதூகலிக்க வையகம் சிலிர்க்கும் இளவேனிலின் வருகைக்குக் கட்டியம் கூறி இத்தரை மகிழ்ந்திட சித்திரை மலர்ந்துள்ளது.

தமிழர் வாழ்வோடும், வரலாறோடும் பின்னிப் பிணைந்த சித்திரையின் மாட்சிக்கு எத்தனையோ சாட்சியங்களை இலக்கியங்கள் கொண்டுள்ளன.

இந்திர விழா, வசந்த விழா என்றெல்லாம் கொண்டாடி களித்தது இச் சித்திரைத் திருநாளில்தான். திங்களையும், செங்கதிரையும் மாமழையையும் போற்றி இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்ந்த தமிழரின் சிறப்புக்குச் சித்திரைத் திருநாள் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

மதிமுக சார்பில் தமிழ்ப் பெருமக்களுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.""


வைகோவின் இந்தக் கருத்துடன் ஒத்துப் போவதுடன், எந்த நாளையும் மக்கள் மகிழ்சித் திருநாளாகக் கொண்டாடுவதிலோ , தெய்வ நம்பிக்கை இருப்பின் சிறப்பு வழிபாடு செய்வதிலோ தடையேதும் இல்லை என்ற கருத்தை வலியுருத்தும் விதமாய் இந்தநாளை, சித்திரை திருநாளாகவோ சர்வதாரி ஆண்டுப் பிறப்பாகவோ கொண்டாடும் அனைவருக்கும் " வாழ்த்து" தெரிவிக்கிறேன்.

மக்கள் மகிழும் எந்த நாளும் புது நாளே எந்த நாளும் திரு நாளே என்பதை அனைவரும் உணரவேண்டும்.மகிழ்ச்சித் திருநாளை, வழிபாடுகளை மற்றும் அடுத்தவர் நம்பிக்கைகளை " தனது கொள்கை / தனது தலைவனுக்கு வால் பிடித்தல் " போன்ற காரணங்களுக்காக முட்டாள்தனம் என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சொல்ல தலைப்பட்ட " சில மூடர்களுக்கும்" புத்தி தெளிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, April 12, 2008

ஆற்காட்டாரின் காலை டிபன் லிஸ்ட்

அடிக்கடி தமிழக அமைச்சர்கள் ஏதாவது தத்துவ முத்து உதிர்த்து காமெடி பண்ணுவாங்க. இதுல தலை சிறந்தவர் "ஆற்காடு வீராசாமி" இவரு ஏற்கனவே உதுத்திருந்த சிந்தனை முத்துக்களை " http://velanvelan.blogspot.com/2007/10/blog-post_02.html " என்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவரது அறிவுத் திறன் பற்றிய நமது கணிப்புக்கு சற்றும் ஏமாற்றம் தராத வகையில் நேற்றும் அவர் உதிர்த்த தத்து(பித்து)வ முத்துக்கள் கீழே.


" ஒரு குடும்பத்தில் காலையில் எழுந்து ஒரு பெண் அடுப்பாங்கரைக்குச் சென்றால், தனக்கு டீ, கணவருக்கு காபி, மாமியாருக்கு ஹார்லிக்ஸ், மாமனாருக்கு பூஸ்ட் போடவேண்டும். டிபன் என்றால், இட்லி, தோசை, பூரி, பொங்கல் என்று ஆளாளுக்கு விதவிதமாக செய்ய வேண்டி உள்ளது. இதைத் தவிர்க்க, காலையில் காபி அல்லது டீ போன்ற ஒரே பானம், டிபன் என்றால் இட்லி அல்லது தோசை போன்று அனைவருக்கும் ஒரே வகையான உணவு மட்டும் தான் என்று, பெண்கள் கண்டிஷனாக சொல்ல வேண்டும். அப்போது தான், காலையில் இருந்து இரவு வரை அடுப்பாங்கரையில் கிடப்பதைத் தவிர்க்க முடியும். இதன்மூலம் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் சேர்ந்து வருமானத்தை ஈட்ட வேண்டும்."


ஒவ்வொரு வேளையும் ஹார்லிக்ஸ் , பூஸ்ட்,காபி, டீ என விதவிதமாக குடிக்கும் மற்றும் ஒவ்வொரு வேளையிலும் இட்லி,தோசை, பூரி , பொங்கல் என்று நாலு விதமான டிபன் செய்து சாப்பிடும், குடும்பத்தில் உள்ளவர்கள்தான் "பெண்கள் சுய உதவிக் குழு"க்களில் சேர்ந்து வருமானம் ஈட்டக் கூடிய நிலையில் இருக்கிறார்களா? அடடா அமைச்சரின் அறிவுத் திறத்தை எத்தனை பாராட்டினாலும் தகும். ஒரு வேளை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர் வீட்டு சமையலரையில் நுழைந்து பார்த்து விட்டு அதுதான் ஒட்டு மொத்த தமிழகத்தின் நிலைமை என்று நினைத்து விட்டாரோ ?


இவர் சொன்னதைப் பார்த்தால் ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது . பென்ஸ் காரில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பணக்கார சிறுவன் சிலர் தெருவில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து கார் டிரைவரிடம் கேட்டானாம் " இவர்களெல்லாம் ஏன் பிச்சை எடுக்கிறார்கள் " என்று. டிரைவர் "சாப்பிட சாப்பாடு கிடைக்கவில்லை, அதனால் பிச்சை எடுக்கிறார்கள்" என்றாராம். அதற்கு சிறுவன் " சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் என்ன ? ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போய் டிபன் சாப்பிட வேண்டியதுதானே" என்றானாம் .அதுமாதிரி இருக்கு ஆற்காடு வீராசாமி சொல்வது :))